'இலங்கையில் நடந்தது இந்நூற்றாண்டின் மிகப் பெரிய படுபாதகச் செயல்!': உலுக்கும் உலக நீதிமன்றம்!

Picture
எல்லாவற்றுக்கும் சட்டம் உண்டு... சண்டை போடுவதற்கும்! வெட்டுக் குத்துக்கும் விதிமுறைகள் வைத்திருக்கிறோம். அதை 'மீறாத' தாக்குதல்கள் முறையானதாகக்கூட அங்கீகாரம் பெற்றுவிடும். ஆனால், இலங்கை அரங்கேற்றி இருக்கும் யுத்தம் உலகின் அத்தனை தார்மீக நெறிமுறைகளையும் கொன்று குவித்து ஓய்ந்திருக்கிறது! 
30 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் முடிவாக புலிகள் அமைப்பு கொன்று தீர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், மனித உரிமை பேசுவோர், சமாதானம் குறித்துக் கவலைப்படுவோர், அமைதிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என அனைவரும் 'இலங்கையில் நடந்தது இந்நூற்றாண்டின் மிகப் பெரிய படுபாதகச் செயல்!' என்று கண்டிக்கிறார்கள். 

'பயங்கரவாதிகளை ஒடுக்கும் போரில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டுள்ளார்கள். இது கண்டிக்கப்பட வேண்டும்!' என்று ஐ.நா-வின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 17 நாடுகள் கோரிக்கை வைத்தன. ஆனால் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதை ஏற்கவில்லை. தீர்மானம் தோற்றுப் போனது.

அது தொடர்பான விவாதத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, ''நம் கண் முன்னால் நடந்த கொடுமைகள் தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். அது நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்!'' என்று மன்றாடினார். தீர்மானம் தோற்றது என்பதைவிட, இலங்கைக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வென்றது. ஐ.நா. சபை ஏற்காவிட்டாலும் உலகத்தின் முன் உண்மை சிரித்தது.

அமெரிக்க இல்லினாய்ஸ் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் பிரான்சிஸ் பாயில், ''கடந்த சில மாதங்களில் மட்டும் 10 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள். அந்தப் பிணங்களை அழிக்கும் வேலை நடக்கிறது. காஸாவில் என்ன நடந்ததோ அதுதான் இலங்கையிலும் நடக்கிறது'' என்று சொன்னார். 'டைம்ஸ்' பத்திரிகை 'சாட்சியம் இல்லாத படுகொலைகள்' என்று தலையங்கம் எழுதியது.

 'வானத்தில் வெடித்து தரையில் பாதிப்பை ஏற்படுத்தும் குண்டுகளால் அதிக உயிரிழப்பு ஏற்படும். பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இது போன்ற தாக்குதலை நடத்தக் கூடாது என்று ஜெனிவா விதி 3 கூறுகிறது. ஆனால், இலங்கை 81 மி.மீட்டர் முதல் 120 மி.மீட்டர் வரையிலான பீரங்கிக் குண்டுகளை வைத்துள்ளது. இவை வெடித்துச் சிதறினால் எவ்வளவு பெரிய மரமும் கருகிக் குச்சியாகிவிடும்.

இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள், வெளியுலகம் கற்பனை செய்வதைவிடவும் மிகமிக மோசமானவை. இந்தப் போர் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை 7 ஆயிரம் சாமானிய மக்கள் பலியாகி இருக்கலாம் என்று ஐ.நா. மன்ற அலுவலர்கள் கணித்திருக்கிறார்கள். மாறாக, 20 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று இப்போது தெரிகிறது!' என்று எழுதுகிறார் அப் பத்திரிகையின் நிருபர். ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் பான்கி மூனுடன் சென்ற நிருபர் இவர்.

இவை எல்லாம் போர் நடந்த காலகட்டத்தில். இப்போது அங்கு என்ன நிலைமை?

''அகதிகளாக முகாம்களில் தங்கியிருந்த மக்களை பார்க்கப் போனேன். அவர்களுக்கு இலங்கைக்குள் நீதி கிடைக்காது. அதற்கான சட்டங்கள் இங்கு இல்லை. இதைச் சொல்வதற்காக நான் தண்டிக்கப்படலாம்'' என்று கண்ணீர் மல்கச் சொல்லி, தனது 11 ஆண்டுகால தலைமை நீதிபதி பதவியில் இருந்து விடை பெற்றுள்ளார், சரத் என் டி சில்வா.

இவரது கூற்றுக்குப் பிறகு, கொஞ்சம் தைரியம் சேகரித்துக்கொண்ட இலங்கை மனித உரிமை அமைப்பாளர் சுனிலா அபயசேகரா என்ற பெண், ''தடுப்பு முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் ஆறாத காயங்களுடன் மாதக்கணக்கில் இருக்கிறார்கள். இலங்கை உளவுத் துறையின் சித்ரவதைகள் பிரபலமானது. இப்படியான சித்ரவதைக்கு உட்பட்டவர்கள் தங்களுக்கு நடந்தவற்றை எங்களுக்குச் சொல்லி வருகிறார்கள்'' என்று வார்த்தைகள் உதிர்த்து இருக்கிறார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் தமிழர்கள் இன்னமும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறதா?

இந்தியாவில் மிக முக்கியமான மனித உரிமை அமைப்பான பி.யூ.சி.எல். அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் இதற்கு முடிவுகட்டும் முயற்சியாகப் பல மாதங்களாக முட்டி மோதிக்கொண்டு இருப்பவர். அவரிடம் கேட்டோம்.

''போர் நடக்கும்போது போரியல் நடைமுறையை மீறுவது இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமாக நடந்துள்ளது. இந்தக் கொடூரங்கள் மொத்தமாக மறைக்கப்படுகின்றன. கொழும்பு பகுதியில் வெள்ளை வேன் மூலமாக ஆட்களைக் கடத்திச் சென்று காணாமல் செய்வதும் அதன் பிறகு போர் என்று அறிவித்து பொதுமக்கள், நோயாளிகள் என்று யாரையும் பார்க்காமல் குண்டுகள் வீசிக் கொல்வதும் தொடர்ந்து நடந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு கொடுத்த அறிக்கையின்படி பல்வேறு மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன. மக்கள் கண்காணிப்பகம், பொதுமக்கள் மீதான தாக்குதலைப் பட்டியலிட்டுள்ளது. சேட்டிலைட் படங்களைப் பல்வேறு நாடுகள் எடுத்து வைத்துள்ளன. எனவே, இலங்கையில் நடந்தவற்றை மறைக்க முடியாது.

இதைக் கேள்வி கேட்கும் இடத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபைதான் இருக்கிறது. அதிலுள்ள நிரந்த உறுப்பு நாடுகளுக்கு எங்கள் அமைப்பு சார்பில் முழுமையான அறிக்கை அனுப்பியிருக்கிறோம். போர்க் குற்றங்கள், மனித வதைகள் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுப்படி இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்துக்கான காரணங்கள் அதில் மலையளவு அடுக்கப்பட்டுள்ளன. இதைப் பரிசீலனை செய்து வருவதாக எங்களுக்கு அந்த நாடுகள் பதிலளித்துள்ளன.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஹேக்கில் உள்ளது. இங்கு 15 நீதிபதிகள் இருக்கிறார்கள். பிராஸிக்யூட்டர் இருக்கிறார். இலங்கை மீது போர்க் குற்றத்தை பதிவு செய்யலாம் என்று இந்நாடுகள் பிராஸிக்யூட்டருக்குச் சொன்னால் ராஜபக்ஷே மீது வழக்கு பதிவாகும். அதன்பிறகு விசாரணை நடக்கும்.

இதில் உள்ள ஒரு சிக்கல், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற நடைமுறையை ஏற்றுக்கொண்டதாக கையெழுத்துப் போடாத நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதைச் சொல்லி அவர்கள் தப்பிக்கப் பார்க்கலாம். அப்போது ஐ.நா. பாதுகாப்பு சபை தன்னிச்சையாக வழக்கைப் பதிவு செய்ய உரிமை இருக்கிறது. எனவே, நிச்சயம் இலங்கை தப்ப முடியாது!'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சுரேஷ்.

இதுவரை இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளின் மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்புகொண்டு மனமாற்றம் செய்யும் காரியங்கள் இவர்களால் நடந்து வருகின்றன.

இந்த வகையில் சமீபத்தில் சிக்கியிருக்கிறார் சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர். ஆப்பிரிக்க நாடான சூடானில் வாழும் கறுப்பின முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டும் முயற்சியாக நடந்த இனஅழிப்பைத் திட்டமிட்டு செய்தவர் ஓமர். அவர் மீது ஆறு வழக்குகள் பதிவானது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில். கடந்த மாதம் 18-ம் தேதி இவர் கைது செய்யப்பட்டு அங்கு ஆஜர்படுத்தப்பட்டு இருக்கிறார்.

இதே போல் போஸ்னியா அதிபர் ரடோவன் கராச்ஸிக் கைதாகி உள்ளார். இரண்டு லட்சம் போஸ்னிய முஸ்லிம்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். 1992-95 காலகட்டத்தில் இது நடந்தது. உள்நாட்டுக் குழப்பத்தால் நாட்டை விட்டுத் தலைமறைவாகிவிட்ட இவர் மீதும் ஹேக் நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சமீபத்தில் பெல்கிரேட் என்ற கிராமத்தில் கைது செய்தனர். நாட்டு வைத்தியராக வாழ்ந்துகொண்டு இருந்தார் அந்த அதிபர். இவருக்குத் துணையாக இருந்த இராணுவ ஜெனரல் ராட்கோ மிளாடிக் இன்னமும் தலைமறைவாகத்தான் இருக்கிறார்.

இன்னொரு உதாரணம்தான் இரத்தத்தை உறைய வைப்பது...

தென் கொரியாவில் இருந்த சர்வாதிகாரி சைங்மான் ரீ, தன்னை எதிர்த்தவர் அனைவரையும் கொன்று குவித்துக் குழிகளில் புதைத்தார். சுடுவதும் புதைப்பதும் தொழிலாக மாறியது. இந்த அட்டூழியத்துக்கு எதிராகப் போராடிய அனைவரும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் அலைந்தார்கள். ஆனால், கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்துப் பெய்த பெரும் மழை வெள்ளத்தில் புதைக்கப்பட்ட பிணங்களின் எலும்புகள் வெள்ளமாக ஓட ஆரம்பித்தன. ஊரறிந்த இரகசியத்தை யாரால் மறைக்க முடியும்?

அமைதி மற்றும் சமாதானத்துக்கான ஆணையம் அது குறித்த விசாரணையை நடத்தியது. அன்று சாட்சி சொல்ல வந்த இராணுவ வீரர்கள் அனைவரும் அந்தக் கொடூரத்தைக் கலங்கிய கண்களுடன் ஒப்புக்கொண்டார்களாம். வரிசையாக நிற்க வைத்துச் சுடும் படங்களை அவர்கள் ஆதாரங்களுடன் ஆணையத்துக்கு ஒப்படைத்தது வரலாறு!

உயிரோடு இருந்து சாதிக்க முடியாததை ஈழத்திலும் செத்துப் போன அந்த சடலங்கள் நிச்சயம் செய்யும்! 



பிரபாகரனியமும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும்!

Picture
ஈழத் தமிழ் மக்களின் விடுதலையை மட்டுமே தன்வாழ்வின் இலட்சியமாக வரிந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். தலைவரது போராட்ட தலைமைத்துவ வல்லமையின் காரணப்பெயராக கூறப்படும் ‘பிரபாகரனியம்’தான் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தின் உந்து சக்தியாக இருந்து கொண்டிருப்பது.தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனியத்தின் தோற்றம், மறைவு அல்லது பிற்பட்ட காலம், முற்பட்ட காலம் என்ற கற்பிதங்கள் எல்லாம் வெறும் மடமைத்தனமான சிந்தனையே ஒழிய, என்றென்றும் தமிழினத்தினுடைய விடுதலைப் போராட்ட அசைவியக்கத்தின் உருவாக்க மையமாக இருக்கும் ‘பிரபாகரனியம்’தான் அவர்களை எக்காலத்திலும் வழிநடத்தும் ‘இயக்கவிசை’ என்பது மறுக்கமுடியாத உண்மை.

எனவே பிரபாகரனியம் என்பது சிறு பொருள் கோடலுள்ள சொல் அல்ல. தமிழினத்தின் தன்மானத்தை, போரிடும் ஆற்றலை, அரசியல் மதிநுட்பத்தை, விலைபோகாத தன்மையை, பற்று உறுதியை, கொள்கை வழுவாப்பண்பை, இலட்சியத்திற்காக மரணிக்கும் வீரத்தியாகத்தின் உன்னதத்தை, தீர்க்கமான அரசியல் போராட்ட ஆளுமையை தமிழினத்திற்குள் வெளிக்கொணர்ந்து, உருவாக்கி, விதைத்து, வளர்த்த இந்த பிரபாகரனியம் இன்றும் என்றும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இரண்டறக் கலந்து வழிநடத்திக் 
கொண்டேயிருக்கும்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை அமைதிவழியில் முன்னெடுத்த தந்தை செல்வா அவர்கள் “தமிழ் மக்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்றார். ஆரம்பத்தில் அகிம்சை வழியில் உரிமை கேட்ட தமிழினத்தின், அரசியல் விடுதலைக்கான போராட்டம் ஒரு திசையற்ற அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டது. அப்போது தந்தை செல்வா அவர்கள் கூறியது போலவே கடவுளாக வந்து தமிழினத்தின் கௌரவமான அரசியல் விடுதலையை சிறுவயது முதலே சுமந்து செம்மையாக வழிநடத்தி, 
அதன் வழிபற்றி பிறழ்வில்லாது, பற்று உறுதியுடன் செயற்பட்டவர் தலைவர் பிரபாகரன்.

பிறப்பிலேயே தலைமைத்துப் பண்பைக் கொண்ட தலைவராக (charismatic leadership)  பிறந்தவர் தான் பிரபாகரன். இவரைப்போன்ற பண்புடனமைந்த தலைவர்கள் இருந்தாலும், மறைந்தாலும் அவர்களது சிந்தனையும் செயற்பாடும் மிகச்சிறந்த வழிகாட்டும் தன்மையைக் கொண்டவை. அப்படிப்பட்ட ஒன்றுதான் பிரபாகரனியமும். இது தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆத்மா. இன்று அதன் இயக்கவிசை சுற்று வட்டத்தில் சுழன்றவர்கள், அறியப்பட்டவர்கள்தான் இப்போதும் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் சரியான வழிபற்றி நடக்கின்றனர்.

கடந்த மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈழத் தமிழர்களின் சக்திக்கு மேம்பட்ட வல்லாதிக்க சக்திகளின் அழுத்தங்கள் இருந்த போதிலும் கொள்கையிலிருந்து வழுவாது அதை முன்னெடுத்தவர். தலைமைக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களினால் விடுதலைப் போராட்டம் திசைமாறி, ஈழவிடுதலைக் கருத்தியலே இல்லாமல் போயிருக்கக்கூடிய வாய்ப்புகளிருந்தும் அந்தச் சமயங்களில் எல்லாம் கொள்கை மாறாமல் உறுதியாக தொடர்ந்து போராடி, ஈழவிடுதலைப் போராட்ட சிந்தனை மாறாமல் வேறொரு தளத்திற்கு நகர்த்திச் சென்ற பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்.

“தலைவர் பிரபாகரன் மக்களையும் போராட்டத்தையும் முள்ளிவாயக்கால் காரிருளில் கைவிட்டுவிட்டு முடிவுரை எழுதாமல் மறைந்து போனார்” என சிலர் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். சுயநலத்திற்காக புலித்தோல் போர்த்தியிருந்த இப்படிப்பட்டவர்களின் சாயம் இப்போதாவது வெளிப்படுவது நன்மை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். 
தலைவர் அவர்கள் 2006 மாவீரர் தின உரையில் “விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் சமூகம் முன்னெடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்”

மேலும் இறுதிக்காலத்தில் போர் உக்கிரமடைந்த போது விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளாராக கே.பி பத்மநாதன் அவர்களை நியமித்து “நாடு கடந்த தமிழீழ அரசு” என்ற புதிய வடிவில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அடுத்த கட்ட போராட்ட வழிமுறையை காட்டாமலா தலைவர் அவர்கள் ‘மறைந்தார்’. அதுமட்டுமில்லாமல் “இனஅழிப்பு” விடயத்தை சரியாக கையாண்டு சிங்களப் பேரினவாத அரசுடன் வாழமுடியாது என்பதனூடாக இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை நிலைநாட்டி, அடுத்தகட்டப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாய்ப்பில்லாமலா உள்ளது! முள்ளிவாய்க்கால் வரை வீரத்துடன ; போராடி கொண்ட கொள்கைக்காகவும், விலைபோகாமலும், வீரமரணமடைந்த அத்தனை போராளிகளும் தங்களின் வீரமரணத்தினூடாக ஒரு செய்தியும் சொல்லவில்லையா? என்பதை சிந்திக்க வேண்டும்.

ஜனநாயக வழியில் அரசியல் விடுதலைப் போராட்டத்தை நகர்த்த தமிழ்த் தேசியத்தை வழிபற்றும் தமிழ்க் கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைத்ததானது இன்னொரு வகையான வடிவமே. சிலவேளை ஆயுதப்பொறிமுறை பின்னடைவைச் சந்தித்தாலும் இரண்டாவது பொறியமைப்பு தமிழ் மக்களின் விடுதலையை கொண்டு நடாத்தும் என்பதில் தலைவருக்கு தெளிவிருந்தது. அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்காக தலைவரின் சிந்தனையில் உருவெடுத்த இந்த இரண்டாவது பொறியமைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்க பாடுபடவேண்டும். என்றாலும் தெளிவில்லாதவர்களும, தலைவர் பிரபாகரனை காழ்ப்புணர்வுடன் பார்க்கும் குறிப்பிட்ட சிலரும் “பிரபாகரனியம்” தோற்றுப்போனதொன்றாகவே காட்டமுனைகின்றனர். அதிலிருந்து விடுபட்டு புதியதொருவகை காலத்திற்குள் தமிழ் மக்களின் போராட்டம் நகர்த்தப்படுகின்றது என்ற தொனியைக் காட்டி தமிழ் மக்களின் போராட்டத்தின் மூன்றாவது காலகட்டம் (ஆதாவது பிரபாகரனியத்திற்கு பின்) என்ற சிந்தனையை புகுத்த நினைக்கின்றனர்.

பிரபாகரனியத்தின் இயக்கவிசை சுழற்சியால் அறியப்பட்ட இவர்கள் தங்கள் அறிவை பொருத்தமாக பயன்படுத்தினால் அதுவே தமிழ் மக்களுக்குப் பயன்தரும். எனவே அறிவை பயன்படுத்தி தமிழ் மக்களின் விடுதலையை அழிவின் பக்கம் கொண்டுசெல்லாமல் ஆக்கபூர்வமாக இரண்டாவது பொறிமுறையிலிருந்து விடுதலைப் போராட்டத்தைச் சரியாக நகர்த்த வழிகாட்டுவதும், கருத்துத் தெரிவிப்பதும் தான் அறிவும் தெளிவும்.

தமிழினத்திடம் அரசியல் வெற்றிடமும் சிந்தனைச்சிதைவும் ஏற்பட்டுள்ளது, ஆளுமைக் குலைவுள்ள தலைமைத்துவமற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் உள்ளது, வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஒரு அவமானம் என்று கருத்துருவாக்கங்கள் செய்யப்படுகின்றன. அதுவே அவர்களின் அறிவு-தெளிவு-துணிவு என கற்பிதப்படுத்தப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பின்னடைவிற்கு பின் கருத்துக்கூறும் இவர்கள் அதற்கு முன் பிரபாகரனியத்தின் துதிபாடுதலையே கொள்கையாக கொண்டிருந்தவர்கள் என்பதை 
மறுக்கமுடியாது. தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டுக்கு தேவையான அறிவும் தெளிவும் துணிவும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கு அறிவையும் தெளிவையும் கொண்டு பலம் சேர்க்கவும் அதை நோக்கிய நகர்வை துணிவாக செய்வதற்கும் தேவையே ஒழிய தற்போதைய அரசியல் நகர்வுகள் மீது சேறுபூசுவதற்கும் வசைபாடுவதற்குமல்ல.

அத்துடன் குழாயடிச் சண்டையை ஏற்படுத்துவது போன்று பொருத்தமறற் விவாதங்களையும் கருத்துருவாக்கங்கங்களையும் ஏற்படுத்துவதில் குறியாகக் கொணடு; செயற்படுவதை தவிர்க்கவேண்டும். தமிழினத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் செயற்பாடுகள் மீது விதண்டாவாத கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பதால்தான் ஆபத்துக்களும் தமிழ் மக்களிடம் நம்பிக்கையீனமும் ஒற்றுமைக்குலைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர, தமிழ் மக்கள் அடுத்தகட்டமாக தமது போராடத்தை நகர்த்திச்செல்வதற்கான 
முனைப்புகளையும் செயற்பாடுகளையும் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

அத்துடன் தலைவர் அவர்களது சிந்தனைகளையும் ஆளுமையான கருத்துக்களையும் வழிபற்றி செயல்வழி செயற்பட சிந்திக்கும் தன்மையுள்ள மிகப்பெரிய இளைஞர் சக்தியும், தமிழ்த் தேசியத்தின்பால் உழைக்கக்கூடிய புத்திஜீவிகளும், மக்களும், உணர்வாளர்களும் ஒன்றுபட்டு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தற்போதுள்ள அரசியல் சூழலில் தமிழ்மக்களின் அரசியல் போராட்ட நகர்வை ஆபத்துக்குள்ளாக்காமல், தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளுக்குச் சிறிது சிறிதாகப் பலத்தைச் சேர்க்கும் அரசியல் செயற்பாடுகளை வீணே விமர்சித்துக் கொண்டிருக்காமல் எல்லோரும் சேர்ந்து வடம்பிடித்து விடுதலைத் தேரை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும். முக்கியமாக தமிழ் மக்கள் தமக்கிடையில் வீண் விமர்சனங்களை தெரிவிப்பது எந்தப் பயனையும் தராது. தமிழர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தத்தேவையில்லை என்பதை போன்று “அவர்களே அவர்களுக்குள் மோதிக்கொள்வார்கள் எனவே இனி அவர்களைப்பற்றி பெரிதாக அக்கறை கொள்ளத்தேவையில்லை” என மற்றவர்களின் குறிப்பாக சிங்களத்திடம் நகைப்பிற்கிடமாக்காமல் செயற்படுவதே தமிழினத்தின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும். முதலில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளையும் அரசியல் நகர்வுகளையும் பலவீனப்படுத்தும் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதை விடுத்து, சரியான கருத்துகளில் காலத்திற்குப் பொருத்தமாக சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சரியாக சொல்வதே எமது நாட்டிற்கும் மக்களிற்கும் நாம் செய்யும் கடமை.

உலக வரலாற்றில் பின்பற்றப்படும் பல தத்துவங்கள் இன்றும் பலரால் பின்பற்றப்படுகின்றது.. அதுபோலவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எந்தக்காலத்திலும் வழிநடத்தும் தன்மை; “பிரபாகரனியத்திற்கு” உண்டு என்பதுடன் அதுவே தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தின் செயலூக்கமும் நம்பிக்கையும் தெளிவும் உள்ள தத்துவ வடிவம். தமிழ் மக்களின் அரசியல் விடுதலையானது “பிரபாகரனியம்” என்ற தத்துவத்திற்குள் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி விடுதலை நோக்கி செயல்பட்டு அரசியல் விடுதலையை அடைவது மட்டுமே தமிழ் மக்களின் முன் உள்ள கடமை. எனவே தமிழ் மக்களிற்கு கருத்துத் தெரிவிக்கும் இணையத்தளங்கள், ஏனைய ஊடகங்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்களிற்கு பொருத்தமான கருத்துக்களை வழங்குவதுடன் பொய்யான கருத்துக்களையும் வக்கிரம் நிறைந்த சொற்களையும் தவிர்த்து சரியான பாதையில் தமிழ் மக்களை வழிநடத்துவார்கள் என நம்புவோம்.

அபிஷேகா (
ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2010)


Picture
Picture
Picture